Total Pageviews

Blog Archive

Sunday, 26 June 2011

சிறீலங்காவிற்கு சீனா மேலும் நிதி உதவி – மேலும் வலுப்படும் சிறீலங்கா சீன உறவு


சிறீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக பாரிய நிதியுதவிகளை வழங்கி இலங்கைத்தீவை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சீன அரசாங்கம், மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றிற்கு இந்த நிதி வழங்கப்பட இருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.


சீன அபிவிருத்திக் கூட்டுறவு வைப்பகம் (China Development Bank Corporation) ஊடாக இந்த நிதி வழங்கலை சீனா அரசாங்கம் மேற்கொள்ளுகின்றது. வீதி அமைத்தல், பாலம் கட்டுதல், தண்ணீர் வழங்கல் போன்ற பல திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரச அதிபர் ராஜபக்ச முன்வைத்துள்ள இதற்கான திட்டத்தை, சிறீலங்காவின் அமைச்சரவை அங்கீகரித்திருப்பதாக கொழும்பின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால் மகிந்த சொல்வதை அப்படியே செய்யும் அளவிற்கே அமைச்சர்களுக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, அமைச்சர்களைப் பொம்மைகள் என வர்ணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சிறீலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யும் நாடுகளில் சீனா முன்னணியில் இருப்பதுடன், உலக வைப்பகம், ஆசிய அபிவிருத்தி வைப்பகம் போன்ற முன்னணி நிதி உதவி வழங்கும் நிறுவனங்களைவிட அதிகளவு நிதியுதவியை சிறீலங்கா அரசாங்கத்திற்குச் செய்து வருகின்றது.

சீன அரசாங்கத்தின் இந்த நிதியுதவி இந்திய அரசாங்கத்திற்கு பாரிய சங்கத்தைக் கொடுப்பதுடன், இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க நினைக்கும் இந்திய அரசாங்கத்திற்கு இது கசப்பான செய்தியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருந்தாலும் இந்த விடயத்தில் சீனாவுடன் நேரடியாக மோதும் நிலைக்கு இந்தியா செல்லாது எனவும், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலுள்ள பல பில்லியன் வர்த்தக உறவே இதற்குக் காரணம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை - அமெரிக்காவும் உறுதி செய்தது

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்ய விரும்பும் அமெரிக்கா, அல்-கொய்தா இயக்கத்தை முழுதும் அழிக்க நினைக்கிறது. புதிதாக அல்-கொய்தாவின் தலைவராகப் பதவி ஏற்றுள்ள அய்மன் அல்-ஜவாஹிரியை கொல்வோம் என்றும் சபதம் செய்துள்ளது அமெரிக்கா.

கடந்த மே மாதம் 1 ஆம் தேதி, அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா-பின்-லேடன் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அவரை சுட்டுக்கொன்றது அமெரிக்கா. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடி வந்த ஒசாமாவை, அமெரிக்கா எவ்வாறு திடீரென்று சுட்டுக்கொன்றது என்று அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களே ஒசாமாவின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுத்தனர் என்றும் செய்திகள் உலா வந்தன. அவ்வாறு ஒசாமா இருக்கும் இடத்தை தலிபான்கள் அமெரிக்காவுக்குத் தெரிவித்தால், போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்து இருந்தது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆப்கன் அதிபர் ஹமிது கர்சாய், தன்னுடைய அரசும், அமெரிக்காவும் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறி இருந்தார். தற்பொழுது, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ், ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவர,  அமெரிக்கா தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னரே தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்த காலத்தில், ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட தலிபான்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் செய்து தலிபான்களை இவ்வளவு தூரம் வளர்த்து விட்டது அமெரிக்கா தான். ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யா வெளியேறிய பின்னர் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்து, அது சண்டையில் போய் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரிபோலியில் இருந்து வெளியேற லிபிய அதிபர் கடாபி முடிவு

தொடர்ந்து நேட்டோப் படைகள் கடாபியின் மாளிகைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதால், தலைநகர் ட்ரிபோலியில் இருந்து வெளியேற லிபிய அதிபர் கடாபி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அவருக்கு லிபியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது.

லிபியாவில் கிளர்சியாளர்களுக்கும், லிபிய அரசுப் படைகளுக்கும் இடையில் தொடர்ந்து பல மாதங்களுக்கு சண்டை நடந்து வருகின்றது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நேட்டோப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக நேட்டோ விமானப்படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகைகளை குறிவைத்து தாக்கி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் நேட்டோப் படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகை ஒன்றை குறிவைத்து தாக்கியதில், அதிபர் கடாபியின் மகனும், சில பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள்.

தொடர்ந்து தனது மாளிகைகள் நேட்டோப்படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், தலைநகர் ட்ரிபோலி தனக்கு பாதுகாப்பு இல்லாத இடம் என்று தற்பொழுது கடாபி கருதுவதாகவும், எனவே தலைநகர் ட்ரிபோலியை விட்டு வெளியேறி வேறு இடத்தில் அவர் தங்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அவருக்கு லிபியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும், அதிபர் பதவில் இருந்து விலகினால், கடாபி லிபியாவில் தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிப்படுவார் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.