Total Pageviews

Blog Archive

Wednesday, 26 October 2011

தேவைதானா கூடங்குளம்?

தமிழக முதல்வர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின் நிலையத்தை நிறுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார். தமிழக அமைச்சரவையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடி அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. பிரதமரின் தூதராக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூடங்குளத்துக்குச் சென்று அங்கு போராடும் மக்களைச் சந்தித்துப் பேசினார்.

ஐ.நா  கூட்டம் முடிந்து பிரதமர் நாடு திரும்பியபின் போராட்டக் குழுவினரைச் சந்திப்பார் என அவர் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக இந்த மாதம் ஏழாம் தேதி பிரதமருடனான சந்திப்பு நடைபெற்றது.தமிழக அமைச்சர் ஒருவர் தலைமையில், சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூடங்குளம் போராட்டக் குழுவினரும், தில்லியில் பிரதமரைச் சந்தித்தபொழுது, பராமரிப்புப் பணிகள்தான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது என்று பிரதமர் கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இன்னும் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்கப்படாமல் இருக்கும்பொழுது, அங்கு பராமரிப்புப் பணிக்கு என்ன தேவை என்று ஏன் யாரும் கேள்வி எழுப்புவதில்லை?

இடிந்தகரையில், இந்தத் திட்டத்தை எதிர்த்து 12 நாள்கள், 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது, தினமும் 10,000-க்கு மேல் மக்கள் திரளாகப் போராடியதைத் தாற்காலிகமாக நிறுத்துவதற்குத்தான் மத்திய, மாநில அரசுகள் இப்படிப் பசப்பு உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கின்றனவா?1985-ல் திட்டமிடப்பட்டு, 1988-ல் ஒன்றுபட்ட சோவியத் யூனியனாக இருந்தபொழுது ராஜீவ் காந்தி கோர்பச்சேவ் ஒப்பந்தத்தில் ரஷியத் தொழில் நுட்பம் மூலம் அணுமின் உற்பத்திக்குக் கூடங்குளம் திட்டம் கையெழுத்திடப்பட்டது. அப்பொழுதே போராட்டங்கள் எழுந்தன. அந்தச் சூழலை அறிந்து பிரதமர் ராஜீவ் காந்தி தொடக்க விழாவுக்கு வரமுடியாத நிலையும் ஏற்பட்டது. 

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அமைந்த ஆளுநர் ஆட்சியில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணங்களை பலமுறை மேற்கொண்டார். இந்தப் பிரச்னை வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸýக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பயந்து சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்தது.இந்தப் பிரச்னையில் உள்ள அபாயங்களை அறியக் குழு அமைத்து முடிவுக்கு வரவேண்டும் என 1989-ல் அமைந்த திமுக அரசு குறிப்பிட்டது. இதற்கிடையில் சோவியத் யூனியன் சிதறுண்டு பல்வேறு நாடுகளாகப் பிரிந்தது. இதனால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.கிடப்பில் போடப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை, 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த பிறகு மீண்டும் உயிர் பெற்றது. 1997-ல் தேவெ கௌட பிரதமராக இருந்தபொழுது, இரண்டாவது ஒப்பந்தம் கையொப்பமானது. அதற்குப் பிறகு பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின. ரூ.13,500 கோடித் திட்ட மதிப்பீட்டில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் செயல்பட இருந்தது.கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்கும்பொழுது மக்களின் கருத்துகளை அரசு நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், இதுகுறித்தான முழு விவரங்களை மக்களுக்குப் புரிதலோடு சொல்லவுமில்லை. 

கூடங்குளம் வட்டார மக்களுக்கு 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் கிடைக்குமென்றும் உறுதிமொழிகள் கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தால், இவ்வட்டார மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் நடைபெறவில்லை.உள்ளூரைச் சேர்ந்த வெறும் 35 பேருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள் எல்லாம் வடபுலத்தைச் சேர்ந்தவர்கள். பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீரும் வரவில்லை. சமீபத்தில் அப்பகுதி மக்களிடம் பேரிடர் வகுப்புகள் நடத்தப்பட்டபொழுது, ஆபத்து வந்தால் மூக்கு, கண், காது ஆகியவற்றை அடைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுங்கள் என சொல்லியபொழுதுதான், அங்குள்ள மக்கள் பீதியுடன் விழித்துக் கொண்டனர்.அதன் பின்தான் முச்சந்தி, டீக்கடை பிரசாரமாக இருந்த நிலை மாறி, போர்க் குணத்தோடு பொதுமக்கள் எழுந்தனர். அதற்குப் பிறகுதான் கூடங்குளம் பகுதி மக்களின் உரிமைக்குரல் சென்னை கோட்டைக்கும், தில்லி செங்கோட்டைக்கும் கேட்கத் தொடங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாவது தலைமுறையின் தொழில்நுட்பத்தால் இத்திட்டம் நிறுவப்படுவதால் ஆபத்து இல்லை என்று இந்த அணுமின் நிலைய இயக்குநர் பாலாஜி கூறினாலும், அது வெறும் ஒப்புக்குச் சொல்கிற வாதமாகத்தான் உள்ளது. வேறு சில அணு விஞ்ஞானிகளும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்துகளைச் சொன்னாலும், இயற்கையை எதுவும் விஞ்ச முடியாது என்பதுதான் நியதி. கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.சோவியத் நாட்டில் உக்ரைனின் செர்னோபிலில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னால் 3,50,000 பேர் அங்கிருந்து வெளியேறினர். 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கதிர் வீச்சால் லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். புற்றுநோய் வந்து தொடர்ந்து மரண வாயில்வரை சென்றவர்கள் பலர். 

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைவிட 40 மடங்கு செர்னோபில் கதிர்வீச்சு அதிகமானது. செர்னோபில் கதிர் வீச்சு தாக்கம் இன்றும் உக்ரைனில் உள்ளது. அந்த நாட்டில் பெறப்பட்ட தொழில் நுட்பம் நமது நாட்டுக்கு மட்டும் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்? இந்த நாசகார சக்தியை நாமே நமக்காக வாங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி.உலக அளவில் நாடுகள் அணு உலை வேண்டாம்; முடிந்த அளவு காற்றாலை, சூரிய சக்தி, கடல், குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா என நினைக்க ஆரம்பித்துவிட்டன. சுவீடன், பின்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, பல்கேரியா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனியா போன்ற நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் அணு உலைகளைத் தவிர்க்க வேண்டுமென கூறுகின்றன.பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அணு உலைத் திட்டத்துக்குத் தாங்கள் கொண்டிருந்த ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன.20 ஆண்டுகள் கட்டமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து, 1000 ஆண்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அணு உலைகளினாலான மின் உற்பத்தி வெறும் 4 சதவீதம் என்பதற்காக ஜெர்மனி 2022-க்குள் அனைத்து அணு உலைகளையும் மூட முடிவு செய்துவிட்டது. அப்படிப்பட்ட ஆபத்தான அணு உலைகளை நாம் மட்டும் அமைக்க வேண்டுமா?

கடந்த 2011 மார்ச்சில் ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்ட சுனாமியால் யுரேனியம் உருகி, கதிர் வீச்சு ஏற்பட்டு கடல் நீரில் அணு உலைகள் மூழ்கிய பின்னும் வெப்பத்தின் தாக்கத்தால் மனித இனம் அழிந்ததை மறக்க முடியுமா? இன்றுவரை கதிர்வீச்சால் புகுஷிமாவில் மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்ற செய்தி வந்தவண்ணம் உள்ளது. விஞ்ஞானத்தில் மேம்பட்ட நாடுகளே பாதிக்கப்படும்பொழுது, நமக்கு அபாயகரமான இந்தச் சூழல் தேவைதானா என்பதுதான் இன்றைக்குள்ள கேள்வி.கூடங்குளம் அணு உலையில் 3.5 சுற்றளவு கொண்ட உருளைகளில் யுரேனியம் அடைக்கப்பட்டு உலைகளின் மத்தியில் வைக்கப்படுகின்றது. அதிலிருந்து அணு பிளப்பதால் அதிக வெப்பம் வெளிப்படும். இந்த வெப்பத்தை நீரில் செலுத்தி, அதிலிருந்து ஜெனரேட்டரில் உள்ள மின்காந்தக் கம்பிகள் மூலம் மின்சாரம் பெறப்படும். ஓர் அணு பன்மடங்கு பிளந்துகொண்டே இருப்பதால், யுரேனியம் உள்ள உலையிலிருந்து அதிகமாக வெப்பம் உருவாகும். தற்போது இந்த உலைகளைக் குளிர்விப்பதற்காகத் திரவ உலோகம் பயன்படுத்தப்படும்.இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய கழிவுகள் வெளியேறும். யுரேனிய உருளை சுமார் 18 மாதங்களுக்கொருமுறை மாற்றியாக வேண்டும். இவற்றால் கதிரியக்கம் ஏற்படும். அதனால் அந்தக் கழிவுகளை எங்கே விடுவது என்கிற கேள்வி எழுகிறது. அவற்றை ஒன்று மண்ணில் புதைக்க வேண்டும் அல்லது கடலின் ஆழத்தில் கொண்டு போய்விட வேண்டும். இருப்பினும்கூட, அதன் தாக்கம் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து கொண்டே இருக்கும். அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.ஒருபக்கம் அணு ஆலை வெடித்தாலோ, சேதமானாலோ பெரும் ஆபத்து உண்டாகும். அதேபோல இந்த ஆலை செயல்பட ஆரம்பித்தால் வெளியேறும் அணுக் கழிவுகளாலும் பெரும் பிரச்னை ஏற்படும். முதலில் அணுக் கழிவுகள் ரஷியாவுக்குக் கொண்டு செல்லப்படும் எனவும், பின்னாளில் அது இங்கேயே மறுசுழற்சி செய்யப்படும் எனக் கூறுகின்றனர். இது சாத்தியமானதாகத் தெரியவில்லை. ஏதோ ஒப்புக்குச் சமாதானம் செய்யக் கூறப்படும் வார்த்தைகளாகத்தான் தெரிகிறது.வெளியேறும் 900 டன் கழிவுகளைப் பாதுகாப்பது பெரும்பாடாகும். 

இதை 24,000 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். சாதாரண சின்ன அளவு புளூட்டோனியத்திலிருந்து கோடிக்கணக்கான மக்களுக்குப் புற்றுநோய் மட்டுமல்லாமல், வேறு ஆபத்துகளும் ஏற்படும் என்கிறார்கள்.இந்தக் கழிவுகளை பலமான கான்கிரீட் தொட்டிகள் அமைத்து பூமிக்குக் கீழே புதைத்தாலும் கதிரியக்கம் தணியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருபக்கம் அணு உலையால் பயங்கர விபத்து ஏற்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள்; மறுபக்கத்தில் அணு உலை செயல்பட்டு அதனால் வரும் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள்.இப்படிப் பிரச்னைகளை நாம் வலியப்போய் விலைகொடுத்து வாங்கத்தான் வேண்டுமா என்பதற்குச் சரியான பதில் கிடையாது.நெல்லை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை ஓரத்திலிருந்து சுரண்டைவரை நில அதிர்வுகளும், பூமிக்குக் கீழ் வெப்பப் பாறைக் குழம்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகச் செய்திகள் உள்ளன. அவ்வாறு நில அதிர்வுகள் ஏற்பட்டால் கூடங்குளத்துக்கும் சேர்ந்துதான் அந்தப் பாதிப்பு வரும். நான்குநேரியில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மனும், மகேந்திரகிரியில் உள்ள அணு மின் சம்பந்தமான கேந்திரமும் அருகில் உள்ளன.இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் அதனால் கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின் நிலையம் புகுஷிமாவில் ஏற்பட்டதுபோல பாதிக்கப்படும் அபாயம் நிறையவே உள்ளது. அதன் தொடர் பாதிப்பு, வடக்கே மதுரை, தெற்கே இலங்கை, மேற்கே திருவனந்தபுரம், மேற்குத் தொடர்ச்சி மலை என மீள முடியாத சோகத்துக்கு நாம் ஆள்பட நேரிடும். போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த நச்சுவாயுக் கசிவிலிருந்து இன்றுவரை நாம் மீள இயலவில்லை என்பதை நாம் எப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியும்?தொலைவிலிருந்து அணு உலை குறித்து ஆயிரம் சமாதானங்கள் சொல்லலாம். கூடங்குளத்தில் நடைபெற்ற சாதாரண சோதனை ஓட்டத்துக்கே அந்த வட்டார மக்கள் பயந்தனர். குழந்தைகள் கதறி அழுதனர். இப்படி தினமும் சகிக்க முடியாத சத்தம் கேட்டால் எப்படி மக்கள் கூடங்குளம் பகுதியில் வாழ முடியும்?மேற்கு வங்கத்தில் ரஷிய நாட்டின் அணு மின் நிலையம் வருவதை மம்தா பானர்ஜி நிறுத்திவிட்டார். 

கேரளத்தில் மக்கள் எழுச்சியால் அணு மின் நிலையம் வருவது தடைப்பட்டது. ஆந்திரத்திலும், மகாராஷ்டிரத்திலும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. அவ்வாறு இருக்கும்பொழுது நாம் மட்டும் கூடங்குளத்துக்கு ஆமாம் சாமி போடுவது சரிதானா?அதெல்லாம் போகட்டும். தங்களது மாநிலத்தில் அணுமின் நிலையம் அமைந்து அதன் பாதிப்பை எதிர்கொள்ளக் கேரளமோ, கர்நாடகமோ, ஆந்திரமோ தயாராக இல்லை. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கத் தமிழகம் ஏற்றுக்கொண்டு, தென் மாவட்ட மக்களின் நல்வாழ்வை அந்த அணு உலைகளில் ஏற்படும் பாதிப்பு பல தலைமுறைகளைப் பாதிக்கும் ஆபத்தை வலிந்து ஏற்றுக் கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் முழுமையாகத் தமிழகத்துக்கு மட்டுமானதாக இருக்குமா என்றால் அதுவும் இல்லை. தென்னக மாநிலங்களுடன் நாம் பகிர்ந்து கொண்டாக வேண்டும்.அதாவது, கூடங்குளத்தால் ஏற்படும் பயன் எல்லோருக்கும். பாதிப்பு தமிழகத்துக்கும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கும் மட்டும். எப்படி இருக்கிறது கதை?

வரலாற்றுப்பதிவின் இன்றைய மறுபார்வை

ஐரோப்பியர்களின் வருகை கடல்மார்க்கமாக இந்தியாவுக்குப் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமாவில் தொடங்குகிறது.வாஸ்கோடகாமா தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியான கள்ளிக்கோட்டையில்தான் முதன்முதலில் 20-5-1498-ல் கால் பதிக்கிறார். இதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் மற்றைய நாடுகளைச் சார்ந்தவர்களும் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு வரத் தொடங்கினார்கள்.அனைத்து ஐரோப்பியர்களின் வருகையும் ஆரம்ப கட்டத்தில் வணிக நோக்கம்தான். அன்றைய இந்திய பூபாகம் எல்லைகள் வரையறுக்கப்பட்ட ஒரே நாடாகவும் இல்லை, ""இந்தியா'' என்றும் வழங்கப்படவில்லை. வடக்கே தில்லி மொகலாய சாம்ராஜ்யம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.தெற்கே விஜயநகர சாம்ராஜ்ய சிதைவுக்குப் பின்னர் ஆங்காங்கே சிதறடிக்கப்பட்ட சிறுசிறு பகுதிகளை விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிதைவுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. எனவே 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, 18, 19-ம் நூற்றாண்டுகளில் இந்தியப் பகுதியில் பலம்வாய்ந்த சாம்ராஜ்யங்கள் உருவாகவில்லை. மாறாக, சிதறுண்ட 500-க்கும் மேற்பட்ட சிறுசிறு நிலப்பகுதிகளைச் சிற்றரசர்களும், ஜமீன்தாரர்களும், பாளையக்காரர்களும் ஆட்சிபுரிந்து வந்தனர்.இந்தச் சூழ்நிலையில்தான் திருப்பதிக்கு அருகாமையில் அமைந்துள்ள சந்திரகிரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வெங்கடாத்திரியிடம் 22-8-1639-ம் நாள் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி, சாந்தோம் கடற்கரைப் பகுதியை ஒட்டி வணிகம் செய்துகொள்ள ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்துதான், ஆங்கிலேயர்கள் வணிகத்தைப் பெருக்கி இங்கு தங்களது ஆட்சியை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தொடங்கினார்கள். இந்தியாவின் தென்பகுதிதான் ஆங்கிலேயர்களின் வணிகநோக்கத்துக்கும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் களமாக அமைந்திருந்தது.ஆங்கிலேயர்கள் படிப்படியாகத் தங்களின் வணிக நோக்கத்திலிருந்து விலகி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியை மேற்கொண்டனர்.18-ம் நூற்றாண்டு முழுமையும், ஆங்கிலேயர்கள் இந்தியப் பகுதியில் குறிப்பாகத் தென்னிந்தியப் பகுதியில், தங்களின் நவீன ராணுவ பலத்தாலும், இங்கிருந்த துரோகிகளின் துணையோடும், ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றிக் கொண்டு வந்தனர். இந்த மண்ணையும், மக்களையும் அடிமைப்படுத்த வந்த மாற்றானை எதிர்க்கும் திறன்கொண்டவர்களாக நெஞ்சுரம் கொண்டவர்கள் இருந்தார்கள். ஆம்! அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் களத்தில் நின்றார்கள். ஆயுதம்தாங்கிப் போர் செய்தார்கள், இறுதிவரை மரணத்துக்கு அஞ்சாமல் போர்க்களத்தில் மாண்டனர், தூக்குமேடையிலும் மரணத்தைத் தழுவிக் கொண்டனர்.வெள்ளையனின் வெடிமருந்துகளும், இங்கிருந்த துரோகக் கும்பலும் அவர்களின் வெற்றியை இறுதியில் உறுதி செய்தது.தென்பகுதியில் நெல்லைச்சீமையில் பூலித்தேவன், தீரன் திப்புசுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள், கேரளவர்மா, விருப்பாச்சி கோபாலநாயக்கர், தூண்டாஜ்வாக், தீரன் சின்னமலை, கிருஷ்ணப்பநாயக்கர் எனப் பட்டியல் தொடரும். பின்னர் இந்தியாவின் வடபகுதியிலும் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற குறுநில மன்னர்களும் உண்டு. ஆனால், இவர்களுடைய வரலாறுகள் சமீபகாலமாகத்தான் வெளிவரத் தொடங்கியுள்ளன.இன்னும் வெளிக்கொண்டு வராத வரலாறுகள் நிரம்ப இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்துப் போரிட்டு மாண்டுபோன மான மறவர்களின் முழுமையான வரலாறுகளை, இளம் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்.சென்னை, கல்கத்தா, தில்லி, மைசூர் மேலும் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களில் சரித்திர ஆராய்ச்சியாளர்களின் வருகையை நோக்கி வரலாற்றுக் குறிப்புகள் காத்துக் கிடக்கின்றன. அந்த வரலாற்றின் பக்கங்கள் ஒவ்வொன்றும் வருங்காலச் சமுதாயத்துக்காக நாட்டுப்பற்றையும், தன்னலமற்ற தியாகத்தையும், ஆதிக்க எதிர்ப்பு உணர்வையும் எடுத்துக்காட்டும் கலங்கரை விளக்குகளாக அமையும். எதிர்கால இளைஞர்கள் அறிவியல் ஆற்றலைவிட, அதிகம் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணமும் கொள்கையும் "நாட்டுப்பற்றும், தன்னலமற்ற தியாகமும்தான்! ஆதிக்க எதிர்ப்பு உணர்வும்தான்!!'உலக நாடுகளில் வியத்தகு முன்னேற்றமடைந்துள்ள சில நாடுகள் முன்னேற்றப் பாதையில் மேலும் விரைந்து செல்கின்றன. இன்னும் சில நாடுகள் முன்னேற்றத்துக்கு வழிதெரியாமலும், வழிகாட்டுதலும் இல்லாமல், பசியால், பட்டினியால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்கின்ற அணுக்கதிர்வீச்சைப்போல், மனித சமுதாயத்தை அழித்துச் சிதைத்திடும் அந்தக் கொள்கைகளைத்தான் இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்தக் கொள்கைகள் நமது நாட்டின் பொருளாதார அடிமைத்தனத்துக்கு வழிவகுத்து மீண்டும் மறுகாலனி ஆதிக்கத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. உலக வல்லரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கி அமல்படுத்திக் கொண்டிருக்கும் சதித்திட்டங்களிலிருந்து, நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டியவர்கள் நாம். இரண்டாம் விடுதலைப்போரை முன்னின்று நடத்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ள நம் இளைஞர்களைத் தயார் செய்யும் புனித நோக்கமே இந்தக் கட்டுரையில், முதல் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துக் கடும் விளைவுகளையும், அழிவுகளையும் வியத்தகு நெஞ்சுரத்துடன் விரும்பி ஏற்றுக்கொண்ட மாவீரர்களின் மயிர்க்கூச்செறியும் போராட்ட வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளில் ஓர் அத்தியாயத்தின் மறுபார்வையாகும்.சிவகங்கைச் சீமையின் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 210-வது (27-10-2011) நினைவு நாள். 210 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மாவீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர்கள் திருப்பத்தூர் கோட்டை அருகில் 24-10-1801-ம் நாள் தொடங்கி 27-10-1801-ம் நாள் முடிய தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவர்.இந்தத் துயர நிகழ்ச்சிக்குப் பின்னர் எஞ்சியிருந்த புரட்சியாளர் எழுபத்தி மூன்று பேர் ""பிரின்ஸ் ஆப் வேல்ஸ்'' என்ற பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். நாட்டுப்பற்றை உயிரென மதிக்கும் இந்திய குடிமக்களும், குறிப்பாகத் தமிழர்களும் அந்தப் புரட்சியாளர்களுக்கு இந்த 210-ம் ஆண்டு நினைவுநாளில் நன்றியும் வீரவணக்கமும் செலுத்துவோம்.நாடு கடத்தப்பட்ட அனைவரும் வெள்ளைத்தளபதி ஜேம்ஸ் வெல்ஸ் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டுடன் 1802-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடித் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கிருந்து 11.2.1802-ம் நாள் "அட்ரமில் நெல்சன்' என்ற கப்பலை லெப்டினென்ட் "ராக்ஹெட்' என்பவர் வழிநடத்த தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து புரட்சியாளர்களை ஏற்றிக்கொண்டு பயணமானது.76 நாள்கள் கடல் பயணத்துக்குப் பின்னர் கப்பல் பினாங் துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் புரட்சியாளர்களுக்கு உணவு சமைப்பவர்களைத் தவிர, அனைவருக்கும் கைவிலங்கு மாட்டப்பட்டிருந்தது. கப்பலிலும், கடலிலும் தங்களை மாய்த்துக்கொண்டவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அறியாத பூமியில் தெரியாத மக்கள் மத்தியில் இறக்கிவிடப்பட்டனர்.பினாங்குத் தீவில் இறக்கிவிடப்பட்டவர்களில் எவரும் மருதுபாண்டியர் மகன் துரைச்சாமியைத் தவிர, நம் நாட்டுக்குத் திரும்பி வந்ததாகச் சரித்திரக் குறிப்புகள் எதுவும் இங்கு இல்லை. அங்கு அநாதையாக விடப்பட்ட புரட்சியாளர்களின் கதி என்னவாயிற்று, வாரிசுகள் எதுவும் உண்டா என்கிற அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.1818-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் மருதுபாண்டியர் மகன் துரைச்சாமி ஜேம்ஸ் வெல்ஸின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்குத் திரும்பியதாகவும், அவரும் மர்மமான முறையில் மதுரைக்கு அருகில் வண்டியூரில் இறந்துவிட்டதாகவும் பேராசிரியர் ராஜய்யன் வரலாற்றுக் குறிப்பொன்றைத் தருகிறார். நாடு கடத்தப்பட்ட 73 பேரும் பல்வேறு சமுதாய - மதப்பிரிவைச் சார்ந்தவர்கள். தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள்.1800 - 1801-ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களால் நடத்தப்பட்ட ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டம், மக்கள் போராட்டமாக - மக்கள் புரட்சியாக உருவெடுக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால்தான் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த ஆங்கிலேயர் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். நாடு கடத்தப்பட்ட 73 புரட்சியாளர்களும் அவர்களின் சொந்தப்பகுதி மக்களுக்கும், உறவினர்களுக்கும் இதுவரையிலும் தெரியாத செய்தி.இந்த உருக்கமான வரலாற்றுச் செய்திகளை மருதுபாண்டியரின் நினைவு நாளில் வெளிக்கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்கள் காலம் கடந்துவிட்டாலும் அவர்களுக்கு வீரவணக்கம் செய்வதை மறக்கவில்லை என்பதையும் காலமும் கயவர்களும் ஒன்று கூடித் தடுத்தாலும், உண்மைகள் ஒருநாள் பூகம்பம்போல் வெடித்துக் கிளம்பும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.இந்த வரலாற்றுப்பதிவின் இன்றைய மறுபார்வை அந்த வீரத்தியாகிகளின் உணர்வும், உணர்ச்சியும் நம் வாரிசுகளுக்கும் இருந்திட வேண்டும் என்பதே அவர்களின் ஏக்கப்பார்வை. அவர்களின் ஏக்கத்தைப் போக்கிட நம் நாட்டு இளைஞர்கள் ஓர் அணியில் திரண்டிட வேண்டும். நாட்டுப்பற்றையும், தன்னலமற்ற தியாகத்தையும், ஆதிக்க எதிர்ப்பு உணர்வையும் முறையே உயிராய், விழிகளாய் கருதிச் செயல்பட இந்நாள் ஒரு நன்னாளாகும். அந்த வேள்விக்கு இது புனித நாள்.அந்த வீரத்தியாகிகளின் நாட்டுப்பற்றும், தன்னலமற்ற தியாகமும் ஆதிக்க எதிர்ப்பு உணர்வும் மங்காமல், மலுங்காமல் காலமெல்லாம் சுடர்விட அவர்கள் கடைசியாக இந்த மண்ணிலிருந்து கப்பலேறிய தூத்துக்குடித் துறைமுகத்தில் நினைவுச்சின்னம் அமைத்திட மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டுமென்பதே அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் ஆகும்.

அமெரிக்காவும் பிரிட்டனும் கடாஃபியை நம்பவைத்து வஞ்சித்த நாடுகள்.

நாட்டு மக்களைச் சித்திரவதை செய்தார், எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார், பத்திரிகைகளை முடக்கினார் என்றெல்லாம் கடாஃபி மீது குற்றம்சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றஞ்சாட்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் எப்படிப்பட்டவை தெரியுமா? கடாஃபியை நம்பவைத்து வஞ்சித்த நாடுகள். 10 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் விஞ்ஞானி ஏ.க்யூ.கானின் அணு ஆயுதக் கள்ளச் சந்தை வந்த பிறகு, அணு ஆயுதத் தொழில் நுட்பம் என்பது கத்தரிக்காய் வெண்டைக்காய் போலக் கிடைக்கத் தொடங்கியிருந்தது. லிபியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை ஒரு விலை கொடுத்து "கள்ளத்தனமாக' வாங்கியது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தோரியம் போன்ற மூலப்பொருள்கள் கிடைத்தன. இரண்டையும் கொண்டு அணுஆயுதத்தை உருவாக்கிவிட கடாஃபி திட்டமிட்டிருந்தார். மூலப்பொருள்களைச் செறிவூட்டும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் ரகசியப் பேச்சு என்கிற பெயரில் பிரிட்டனும் அமெரிக்காவும் கடாஃபிக்கு வலை விரித்தன. 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு, கொஞ்சம் மேற்குப்பக்கம் கடாஃபி சாயத் தொடங்கியிருந்த காலம் அது. தனது அல்காய்தா விசுவாசத்தையும் அவர் குறைத்துக் கொண்டிருந்தார். பக்கத்து நாட்டுக் கலகக்காரர்களுக்கும் அவர் உதவுவதை நிறுத்திக் கொண்டிருந்தார். இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் பாலஸ்தீனப் போராட்டக்காரர்கள் மீதான ஆர்வத்தையும் கைவிட்டிருந்தார். அயர்லாந்து புரட்சிப் படைக்கு உதவி செய்து பிரிட்டனைச் சீண்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.ரெüடி நாடு என்கிற பெயரைப் போக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. அதனால் மேற்கத்திய நாடுகளின் சதியைத் தெரிந்து கொள்ளவில்லை. பிரிட்டனும் அமெரிக்காவும் கேட்டுக் கொண்டபடி அணு ஆயுதத்தைக் கைவிடுவதாக கடாஃபி அறிவித்தார். ரசாயன ஆயுதங்கள், நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் போன்றவற்றை ஒப்படைத்தார். இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அணு ஆயுதக் கள்ளச்சந்தையை ஏ.க்யூ.கான் உருவாக்கியிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அமெரிக்காவிடம் கொடுத்தார் கடாஃபி. பூரித்துப் போன பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் நேரில் வந்து கடாஃபியைப் பாராட்டினார். அதன்பிறகு பல முக்கிய எண்ணெய் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. கடாஃபியின் படைகளுக்கு பிரிட்டன் பயிற்சி அளித்தது. இப்படிப் பல வகையிலும் கடாஃபிக்கும் மேலைநாடுகளுக்குமான நெருக்கம் அதிகரித்தது. ஆனால் இந்த உறவு உண்மையானதல்ல என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.கடாஃபிக்கு வீசிய அதே வஞ்சக வலையைத்தான் வடகொரியாவுக்கும் ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகள் வீசின. ஆனால் அந்த நாடுகள் மசியவில்லை. அணுஆயுத, அணுசக்தித் திட்டங்களைக் கைவிடுவதாக இல்லை. அதனால் இன்று வரைக்கும் பொருளாதாரத் தடைகள் போன்ற சாத்வீக வழியிலேயே அந்த நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளை நம்பி, தம்மிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்த கடாஃபிக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகளை மட்டும் குறைகூறிப் பயனில்லை. வளரும் நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் சீனாவும் ரஷியாவும்கூட ஒரு வரலாற்றுத் தவறைப் புரிந்திருக்கின்றன. லிபியாவின் வான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கான அனுமதி கோரும் தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு வந்தபோது, இந்த இரு நாடுகளும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடாஃபிக்கு இந்தக் கதி தேவைதான் என்று நியாயம் கூறப்படுகிறது.கடாஃபி பல்வேறு வகையான குற்றங்களைப் புரிந்தவராக இருக்கட்டும். அதற்காக இன்னொரு நாட்டில் புகுந்து நாட்டின் தலைவரைக் கொடூரமாகக் கொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணு ஆயுதங்களைக் கைவிடுவோருக்கும், வைத்துக் கொள்ளாதவர்களுக்கும் இதுதான் நிலை என்றால், அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மீது உலக நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக மேற்கத்திய எதிர்ப்பு நாடுகளுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிடும். இதுவரை அணுஆயுதம் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை வைத்துக் கொள்ளாத நாடுகள்கூட அவற்றைத் தயாரிப்பதற்கான முயற்சிகளைத் தேடக்கூடும். ஏ.க்யூ.கானின் ஆள்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இந்தக் காலத்தில் இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை. லிபியாவிலேயே கடாஃபிக்கு கடும் எதிர்ப்பு இருந்தது என்பது உண்மைதான். தமக்கு எதிரான போராட்டங்களை ராணுவத்தின் மூலம் அடக்கினார் என்பதுதான், பாதுகாப்பு சபையில் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் முக்கிய அம்சம். ஆனால், அன்று தீர்மானத்துக்கு ஆதரவாக நின்றவர்கள், இன்று சிர்தே நகரையே தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். பல நூறுபேரைக் கொன்றிருக்கிறார்கள். கடாஃபியைப் பிடித்த இடத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் சிதறிக் கிடந்திருக்கின்றன. கடாஃபி எப்படிச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பதைச் சொற்களால் விவரிக்கவே முடியாது.கடாஃபி கொடூரமான குற்றவாளியாகவே இருந்தாலும், அவரைச் சித்திரவதை செய்ததன் மூலம் மேற்கத்திய நாடுகளும் மாபெரும் போர்க்குற்றம் புரிந்திருக்கின்றன. ஒபாமா கொண்டுவரும் சட்டங்களைச் சொந்தக் கட்சியினரே மதிப்பதில்லை. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் பெயர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் கெட்டுப் போயிருக்கிறது. இப்படி எதிர்கால நம்பிக்கையை இழந்தவர்கள் "நியாயத் தீர்ப்பு' வழங்கும் நிலையில்தான் இன்றைய உலக அரசியல் இருக்கிறது.