Total Pageviews

Blog Archive

Thursday, 20 October 2011

அமெரிக்கா-பாகிஸ்தானின் 'ஹக்கானி நெட்வோர்க்' சண்டை!!



பாகிஸ்தான் உதவியோடு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கர தீவிரவாத அமைப்பான ஹக்கானி நெட்வோர்க் அமைப்பை கட்டுப்படுத்தும் விஷயத்தில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நீங்கள் நினைத்த நேரத்தில் உள்ளே நுழைய இது இராக் அல்ல. நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு என்பதை அமெரிக்கா மறந்துவிடக் கூடாது. எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒன்றுக்கு 10 முறை அமெரிக்கா யோசிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் கயானி மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கயானியின் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா மிக சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஹக்கானி நெட்வோர்க் அமைப்பை பாகிஸ்தான் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும், இல்லாவிட்டால் ராணுவ உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆனால், அந்த உதவிகளே தேவையில்லை என ஜெனரல் கயானி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் தங்கள் நாட்டு ராணுவத் தளபதி நேரடி மோதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் பிரதமர் கிலானியும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ராணுவத் தளபதிக்கு எதிராகப் பேசினால், இவர்களது பதவிக்கும் உயிருக்குமே கூட உத்தரவாதம் இருக்காது என்பது குறிப்பிடதக்கது.

ஹக்கானி நெட்வோர்க் என்பது வானத்தில் இருந்து திடீரென குதித்த தீவிரவாத அமைப்பு அல்ல. அதை உருவாக்கியதே அமெரிக்காவும், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயும் தான்.

1070களில் சோவியத் படைகளுக்கு எதிராகப் போரிட பல அமைப்புகளுக்கு பாகிஸ்தான் மூலம் உதவி செய்தது அமெரிக்கா. இவ்வாறு உருவாக்கப்பட்டவர்கள் தான் முஜாகிதீன்கள். இவர்களுக்கு ஆயுதத்தையும் பணத்தையும் ஐஎஸ்ஐ மூலம் அமெரிக்கா தந்தது.

அந்த வகையில் மெளல்வி ஜலாலுதீன் ஹக்கானி, அவரது மகன் சிராஜூதீன் ஹக்கானி ஆகியோர் தலைமையிலான இந்தத் தீவிரவாத அமைப்பையும் அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து உருவாக்கின. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் மகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.

தலிபான்கள், அல்-கொய்தாவைக் கூட பெருமளவுக்கு ஒடுக்கிவிட்ட அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக விளங்குவது இந்த ஹக்கானி நெட்வோர்க் தான். இவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்தி வரும் தாக்குதல்களால், ஏராளமான அமெரிக்க, நேடோ படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இந் நிலையில் இந்த அமைப்பை ஐஎஸ்ஐ தான் உரம் போட்டு வளர்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களை ஒடுக்குமாறு பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர், அந்த நாட்டை மறைமுகமாக கட்டுப்படுத்தும் திட்டத்தில் உள்ள பாகிஸ்தான் அதற்காக பெருமளவில் நம்பியுள்ளது ஹக்கானி நெட்வோர்க் அமைப்பைத் தான். முன்பு தலிபான்களை உருவாக்கி ஆப்கானிஸ்தானை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாகிஸ்தான். ஆனால், தலிபான்களை அமெரிக்கா ஒடுக்கிவிட்டதால், இந்த முறை ஹக்கானி நெட்வோர்க்கை பயன்படுத்தும் திட்டத்தில் உள்ளது பாகிஸ்தான்.

இதனால், அவர்களை ஒடுக்க மறுத்து வருகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி. இதையடுத்து வசீர்ஸ்தான் பகுதிக்குள் தனது படைகளை நேரடியாக அனுப்பி ஹக்கானி நெட்வோர்க் தீவிரவாதிகள், அவர்களது முகாம்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதை கடுமையாக எதிர்த்துள்ள கயானி, எங்கள் நாடு ஈராக் அல்ல, அணு ஆயுதம் வைத்திருக்கிறோம் என அமெரிக்காவை வெளிப்படையாகவே மிரட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்க நெருக்குதலால் தங்களால் விரட்டியடிக்கப்பட்ட பல தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் அடைக்கலம் தந்து வருவதாகவும், அவர்களுக்கு அமெரிக்க உதவியுடன் ஆயுதங்களைத் தந்து பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்த திருப்பி அனுப்பி வருவதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.

அதே போல உங்கள் பேச்சைக் கேட்டு ஹக்கானி நெட்வோர்க் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்தால், அவர்களை நீங்கள் வளைத்துப் போட்டு, எங்கள் மீதே தாக்குதல் நடத்த திருப்பி அனுப்புவீர்கள். இதனால், ஹக்கானி நெட்வோர்க் மீது நாங்கள் கை வைக்க மாட்டோம் என்கிறது பாகிஸ்தான்.

ஹக்கானி நெட்வோர்க் தலைவர்களை அமெரிக்க அதிகாரிகள் கத்தாரிலும் துபாயிலும் வைத்து சந்தித்து சமாதானப் பேச்சு நடத்தியதாகவும் கூட பாகிஸ்தான் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில் ஹக்கானி நெட்வோர்க் என்பது பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் 'Blue eyed boys' என்கிறது அமெரிக்கா.

ஆனால், ஹக்கானி நெட்வோர்க்கை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்கிறார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா.

மொத்தத்தில் இந்த இருவருமே சேர்ந்து Frankenstein மாதிரி ஒரு பிசாசை உருவாக்கியுள்ளன. அதன் மீது இருவருமே நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை. அந்த அமைப்பை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்த பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்காவும் முயன்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு உடையும் நிலைக்கு வந்துவிட்டதால், நிலைமையை சரி செய்ய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இன்று பாகிஸ்தான் வருகிறார். (அவர் நேற்றே ரகசிய பயணமாக ஆப்கானிஸ்தான் வந்துவிட்டார். பாதுகாப்பு காரணங்களால், அவரது பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது)

பாகிஸ்தான் நட்பு நாடு என அவர் பிரஸ்மீட்டில் பேசுவார் என்பது மட்டும் நிச்சயம். ஆனால, பூட்டிய அறைக்குள் ஹக்கானி விவகாரத்தை வைத்து பாகிஸ்தான் தரப்பை உருட்டி எடுக்க தன்னுடன் சிஐஏ தலைவர் ஜெனரல் டேவிட் பெட்ராசையும், முப்படைகளின் கூட்டுத் தலைவர் ஜெனரல் மார்டின் டெம்பிசியையும் அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானியை சந்தித்துப் பேசுவதோடு, பாகிஸ்தான் ராணுவத் தளவதி அஸ்வாக் பர்வேஸ் கயானியையும் சந்தித்துப் 'பேசவுள்ளனர்' (சண்டை போட உள்ளனர்).

நீலகிரியில் அமையும் 'நியூட்ரினோ' ஆராய்ச்சி மையம்


நீலகிரியில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ளது.

இது தொடர்பாக இந்திய அணு சக்திக் கழகத்தின் தலைவர் அனில் ககோட்கர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு பிளவின்போதோ, சூரியக் கதிர்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது இது உருவாகிறது.

ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினம்.

சூரியனிலிருந்து கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் பூமியில் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சராசரியாக ஒரு மனிதனி்ன் உடலில் ஒரு வினாடிக்கு 50 டிரில்லியன் நுழைந்து வெளியேறுகின்றன.

இந்த நியூட்ரினோக்களை 'பிடிப்பது' மிக மிகக் கடினம். இதற்காக ஜப்பானில் ஒரு மாபெரும் அண்டர்கிரவுண்ட் ஆராய்ச்சி மையம் (Super K) உள்ளது. ஹிடா நகரில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் தரைக்கு அடியில் 1000 மீட்டருக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 41.4 மீட்டர் உயரம், 39.3 விட்டம் கொண்ட மாபெரும் தொட்டிகளில் மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் தான் நியூட்ரினோக்களை பிடிக்க உதவும் கருவியாகும்.

ஆனால், இவ்வளவு பெரிய இந்த தொட்டியில் சிக்குவது ஆண்டுக்கு சில நியூட்ரினோ துகள்களே.

இவ்வளவு இன்ட்ரஸ்டிங்கான இந்த நியூட்ரினோவால் பூமிக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து இதுவரை ஏதும் தெரியவில்லை. மேலும் நியூட்ரினோக்களை முழுமையாக ஆராய்ந்தால் அண்டம் எப்படி தோன்றியது என்பதை அறியதும் எளிதாகும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் நியூட்ரினோ குறித்த ஆர்வம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.

இப்போது இந்த ஆராய்ச்சியில் இந்தியாவும் இறங்கியுள்ளது.

இதற்கான ஆய்வு மையம் அமைக்க மிகவும் தனிமையான, மாசு இல்லாத இடம் வேண்டும். மேலும் இயற்கையான சுரங்கங்கள் வேண்டும். நாடெங்கும் இந்திய அணு சக்திக் கழகம் நடத்திய ஆய்வில் தமிழகத்தின் நீலகிரி மலைப் பகுதியே இதற்கு உகந்தது என்று தெரியவந்துள்ளது.

அங்குள்ள பைகரா மின் நிலையத்துக்கு 2 கி.மீ. தொலைவில் 2,207 மீட்டர் உயரத்தில் மசினகுடி அருகே உள்ள ஒரு குன்றில் 1,300 மீட்டர் ஆழம் கொண்ட மாபெரும் சுரங்கம் உள்ளது.

இந்த இடத்தில் ஆய்வு மையத்தை அமைக்க அணு சக்திக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்துவிட்ட நிலையில் முதல்வர் கருணாநிதியை ககாட்கர் தலைமையிலான விஞ்ஞானிகள் சந்தித்து நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து விளக்கி மையத்தை அமைக்க இடம் கோரினர்.

இதற்கு முதல்வர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். அதற்கு முன் அப் பகுதியில் வசிக்கும் மக்களிடமும் இத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சந்தேகங்களையும் போக்க நடவடிக்கை எடுக்குமாறு அணு சக்தி விஞ்ஞானிகளிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்த திட்டத்திற்காக மத்திய அணுசக்தித் துறை ரூ.900 கோடி ஒதுக்கியுள்ளது.




அமெரிக்காவின் ஒரு நீர்மூழ்கியில் 150 அணு ஆயுதங்கள்!


ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, அமெரிக்கா 'லிட்டிஸ் பாய்' என்ற அணுகுண்டை வீசி தாக்கியது. அதில் சுமார் 1.4 லட்சம் பேர் பலியாயினர். இதன் நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இது நடந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஹிரோசிமா-நாகசாகியின் வலி இன்னும் மறையவில்லை.

அதே நேரத்தில் உலக நாடுகளின் 'அணு ஆயுத தாகமும்' இன்னும் குறையவில்லை.

ஒரு பக்கம் பனிப் போர் காலத்தில் தயாரித்து குவித்து வைத்த அணு ஆயுதங்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் அழித்து வந்தாலும், இன்னொரு பக்கம் இரு நாடுகளுமே போட்டி போட்டிக் கொண்டு நவீன ரக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

'Global nuclear weapons inventories, 1945-2010' என்ற ஆய்வறிக்கையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

ராபர்ட் நோரிஸ், ஹேன்ஸ் கிரிஸ்டென்சன் ஆகிய சர்வதே அணு ஆயுத நிபுணர்கள் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் விவரம்:

இந்தியா மற்றும் பாகி்ஸ்தானிடம் தலா 150 அணு ஆயுதங்கள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், அமெரிக்காவின் ஒரு டிரைடன்ட் ரக நீ்ர்மூழ்கியிலேயே 150 அணு ஆயுதங்களுடன் கூடிய ஏவுகணைகள் உள்ளன.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேல், வட கொரியா போன்ற நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை.

இன்றைய நிலையில் உலகின் 9 அணு ஆயுத நாடுகளிடம் சுமார் 22,400 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. இதில் 95 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தான் உள்ளன.

இதில் அமெரிக்காவிடம் 9,400 அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் 5,100 அணு ஆயுதங்கள் பென்டகன் வசமும் மற்றவை அமெரிக்க அணு சக்தித் துறையிடமும் உள்ளன.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரான்சிடம் தான் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. பிரான்சிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன.

அடுத்த நிலையில் சீனா உள்ளது. அந்த நாட்டிடம் சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் 100 அணு ஆயுதங்களைத் தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் பிரிட்டனும் பிரான்சும் தங்களது அணு ஆயுதங்களை பெருமளவு குறைத்துவிட்டன. பிரிட்டனிடம் 225 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், தனது ஏவுகணைகளின் எண்ணிக்கையை பிரிட்டன் வெறும் 50 ஆக சுருக்கிவிட்டது. இவற்றால் மொத்தமே 150 அணு ஆயுதங்களையே ஏந்திச் செல்ல முடியும். மேலும் தன்னிடம் உள்ள 3 அணு ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கிகளில் ஒன்றை மட்டுமே பிரிட்டன் இயக்கி வருகிறது.

பிரான்ஸ் தனது அணு ஆயுத எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்து வருகிறது. 1964ம் ஆண்டில் 1,260 அணு ஆயுதங்கள் வைத்திருந்த பிரான்ஸ் அதை 1992ல் 540 ஆகக் குறைத்தது. இப்போது 300 ஆக்கிவிட்டது. தொடர்ந்து இவை குறைக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி கூறியுள்ளார்.

இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவுகள் மதிப்பிட்டுள்ளன.

1945ம் ஆண்டு முதல் உலகில் சுமார் 1.28 லட்சம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் 55 சதவீத ஆயுதங்கள் அமெரிக்காவிலும் 43 சதவீத ஆயுதங்கள் சோவியத் யூனியன்/ரஷ்யாவிலும் தயாரிக்கப்பட்டன. 1986ம் ஆண்டில் தான் உலகில் மிக மிக அணு ஆயுதங்கள் இருந்தன.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு அமெரிக்காவும் ரஷ்யாவும் 'Strategic Arms Reduction Treaty (New START)' ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த ஆயுத ஸ்டாக்குகளை குறைத்து வருகின்றன. அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய ரஷ்யாவுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் நிதியுதவியும் அளித்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு சுமார் 1,000 அணு ஆயுதங்களை ரஷ்யா அழித்து வருகிறது.

அமெரிக்கா இதுவரை 60,000 அணு ஆயுதங்களை அழித்துவிட்டது. ஆனால், இதிலிருந்த 14,000 புளுட்டோனியம் கருக்களை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. இதைக் கொண்டு எந்த நேரமும் புதிய அணு ஆயுதங்களைத் தயாரித்து விடலாம். இந்த புளுட்டோனியம் பேன்டெக்ஸ் பிளாண்ட் மற்றும் டென்னசி மாகாணத்தி்ல் ஒரு ரகசிய இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டனிடம் 1970ம் ஆண்டில் தான் மிக அதிகபட்சமாக 350 அணு ஆயுதங்கள் இருந்தன. இதில் மூன்றில் ஒரு பகுதி ஆயுதங்களை அந்த நாடு அழித்துவிட்டது.

ஆனால் அதே நேரத்தில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆயுதத் தயாரிப்பை தீவிரமாக்கியுள்ளன. அதே போல அமெரிக்காவும் ரஷ்யாவும் ரகசியமாக நவீன ரக அணு ஆயுதத் தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும் அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் 500 ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் சுமார் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்றும் மேலும் 105 அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான புளுட்டோனியமும் இருக்கலாம் என்று தெரிகிறது.

பாகிஸ்தானிடம் 90 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 90 ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான அணு கதிர்வீச்சு பொருட்கள் பாகிஸ்தான் வசம் உள்ளன.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.