Total Pageviews

Friday, 23 March 2012

இலங்கைக்கு எதிராக ஓட்டு: இலங்கையில் எப்படியான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம், 24-15 என்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றது பற்றி இலங்கையில் எப்படியான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன? இதோ, இப்படித்தான்:
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், “15 நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பெரும் திருப்தி அளிக்கிறது” என்கிறார்.
“அந்த 15 நாடுகள் மீதும் பல்வேறு விதமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அவ்வளவு அழுத்தங்களின் மத்தியிலும், 15 நாடுகள் எமக்கு வாக்களித்துள்ளன. வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த 8 நாடுகளுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் உள்ளன. 15 நாடுகள் எமக்கு வாக்களித்ததன் மூலம், தீர்மானத்தை எதிர்த்துள்ளன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல், தீர்மானத்தைவிட்டு ஒதுங்கி நின்றுள்ளன. மொத்தத்தில், 23 நாடுகளுக்கு இந்த தீர்மானத்தில் உடன்பாடு கிடையாது.
24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. வித்தியாசம் 1 வாக்குதான். இந்தியா எமக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், தீர்மானம் தோற்றுப் போயிருக்கும்” என்றும் கூறியுள்ளார் அவர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷே, “வெளிநாட்டு நெருக்குதல்கள் ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. இதெல்லாம் சாதாரணம். வெளிநாட்டு நெருக்கடிகளை வெற்றிகரமாக முறியடிக்கக் கூடிய நிலைமை எமது நாட்டில் காணப்படுகின்றது. காலத்துக்கு காலம்  இவ்வாறான வெளிநாட்டு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்படியான நெருக்கடிகளை எல்லாம் முறியடிக்க எங்களால் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே, “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள உறவில் எவ்வித மாற்றமும் கிடையாது. இந்தியா எமக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுக்கும்போது, அவர்களுக்கு உள்நாட்டில் (இந்தியாவில்) சில அரசியல் அழுத்தங்கள் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷேவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷேவும், இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்கள்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் செயலாளர் குமாரஸ்ரீ ஹெட்டிகே, “இந்த நாட்டின் முன்னாள் தலைவர்கள் சிலர், இலங்கைக்கு எதிரான நாடுகளுடன் சேர்ந்து, எமக்கு துரோகம் செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இவர் யாரைப்பற்றி குறிப்பிடுகிறார்? எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பற்றியா?

இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா


ஜெனீவாவில் சற்று நேரத்துக்குமுன் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக 24 நாடுகளும், ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. எந்தப் பக்கம் வாக்களிக்கும் என அதிக சஸ்பென்ஸை ஏற்படுத்தியிருந்த இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.
இலங்கைக்கு இரு அயல்நாடுகள் உள்ளன. ஒன்று இந்தியா, மற்றையது மாலதீவு. இவற்றில், இந்தியா, எதிர்த்து வாக்களித்திருக்க, மற்றைய அயல் நாடான மாலதீவு, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.
மற்றொரு விஷயம், இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு ஆசிய நாடு இந்தியாதான். வாக்களிப்பில் கலந்துகொண்ட மற்றைய அனைத்து ஆசிய நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, மாலைதீவு, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக 47 நாடுகள் உள்ளன. தீர்மானம் வெற்றிபெற 24 வாக்குகள் தேவை. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்ததால், இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் இரு தரப்பையும் ஆதரிக்காமல், நடுநிலைமை வகித்தன.
சில நாடுகள் வாக்களிப்பதற்குமுன், தாம் எதற்காக ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்கின்றன என தமது கருத்தை தெரிவித்துவிட்டு வாக்களித்தன. இதோ, சில நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களித்த காரணங்களைப் பாருங்கள்:
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பங்களாதேஷ் நாட்டுப் பிரதிநிதி, “குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மட்டுமே இப்படியான தீர்மானங்களை கொண்டு வருவதை நாம் விரும்பவில்லை. அதனால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார்.
சீனாவின் பிரதிநிதி, “இலங்கையில் உள்நாட்டு விவகாரம் இது. அதில் தலையிடுவது, மற்றொரு நாட்டின் இறைமையில் தலையிடுவது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார். ரஷ்யப் பிரதிநிதி தெரிவித்த கருத்தும் இதோதான்!
மாலதீவு பிரதிநிதி, “குற்றச்சாட்டு சரியானதுதான். ஆனால், அதை ஆராய்ந்து திருத்திக் கொள்வதற்கு இலங்கைக்கு கொடுத்த கால அவகாசம் போதாது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார். கிர்கிஸ்தான் பிரதிநிதி கூறிய காரணமும் இதேதான்.
பிலிப்பீன்ஸ் நாட்டின் பிரதிநிதி, “நீண்டகால யுத்தம் முடிந்து இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஒரு நாட்டின் (இலங்கை) மீது அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கை இது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார்.
கியூபா நாட்டு பிரதிநிதி, மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து தமது நாட்டின் நிலைப்பாட்டை தெரிவித்தார். “இலங்கைக்கு எதிரான நடவடிக்கை, இரட்டை நிலைப்பாட்டை (double standards) உடையது. சில நாடுகள் எந்த போர்க் குற்றமும் செய்யலாம். அதற்கு விசாரணை கிடையாது. இலங்கை போன்ற சில நாடுகள் மீதுதான் விசாரணை வைக்கிறீர்கள்.
அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை கோருகின்றன. இவர்கள் ஏன் லிபியாவில் நேட்டோ படைகளும், ஈராக்கில் அமெரிக்கப் படைகளும் செய்த போர்க் குற்றங்களையும் விசாரிக்க கோரவில்லை? நாங்கள் (கியூபா) இலங்கையின் நண்பர். இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கிறோம்” என்று தெரிவித்தார் கியூபா பிரதிநிதி.

இலங்கைக்கு எதிராக (பிரேணைக்கு ஆதரவாக) வாக்களித்த நாடுகள்:

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரியா, இத்தாலி, நார்வே, ஸ்பெயின், பெல்ஜியம், சுவிட்ஸர்லாந்து, கிரீஸ், ஹங்கேரி, போலந்து, மால்டோவா, ருமெனியா, சிலி, காஸ்டா ரிக்கா, கௌதமாலா, மெக்சிகோ, பெரு, உருகுவே, பெனின், கெமரூன், லிபியா, மொரிசியஸ், நைஜீரியா.

இலங்கைக்கு ஆதரவாக (பிரேணைக்கு எதிராக) வாக்களித்த நாடுகள்:

பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கத்தார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்குவடோர், ரஷ்யா, காங்கோ, மொரிட்டானியா, உகன்டா.

வாக்களிப்பில் நடுநிலை வகித்த நாடுகள்:

ஜோர்தான், அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், கிர்கிஸ்தான்.