Total Pageviews

Blog Archive

Friday, 6 January 2012

புதிய தகவல் - அமெரிக்காவின் டிரோன் உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது எப்படி?.


   

மெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக் கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. 
அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை. காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பிட்ட விமனம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது.
புரியவில்லையா? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது. அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட்(தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும். ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது. அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்.. தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது). இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது.

அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது. பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றைமட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை. அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான்.
ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளது.

காரைக்கால் கடலில் அரியவகை புள்ளி நண்டு அதிக அளவில் சிக்கியது

காரைக்காலில் : தானே புயலுக்கு பின் கடலுக்கு சென்ற காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வலையில் அரிய வகை புள்ளி நண்டு அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவ்வகை நண்டுகள் கிலோ ஸீ200க்கு சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். தானே புயலுக்கு பின் கடலுக்கு சென்ற, காரைக் கால் மாவட்ட மீனவர்கள், கடந்த 2 நாட்களாக கரை திரும்பி வருகின்றனர். இவர்களில் நேற்று காலை திரும்பிய பெரும்பாலான மீனவர்கள் வலையில் அரிய வகை புள்ளி நண்டுகள் அதிக அளவில் கிடைத்திருந்தது. 

சாதாரண நண்டுகள் கிலோ ஸீ100க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், புள்ளி நண்டுகள் கிலோ ரூ.180 முதல் 220 வரை விற்பனையானது. புள்ளி நண்டு குறித்து மீனவர்கள் கூறுகையில், ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில் இதுபோன்ற புள்ளி நண்டுகள் கிடைக்கும். தற்போது புயலினால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதிக அளவில் கிடைத்துள்ளது. இந்த நண்டுகள் சாதரண நண்டுகளை விட அதிக சுவையானது. எனவே இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வார்கள் என்றனர்.

புதிய முறைப்படி 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற வேண்டுமா...

அலைந்து திரிந்து, 6 மாதங்களுக்கு பின்பு பாஸ்போர்ட் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது எந்த அலைச்சலுமின்றி, உட்கார்ந்த இடத்திலிருந்தே 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் நம் கையில் வந்து சேர்ந்தால் மகிழ்ச்சி தானே! 

முன்பெல்லாம் ஒரு பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து விட்டு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருக்கும். ஆனால் புதியதாக நிறுவப்பட்ட 'பாஸ்போர்ட் சேவக்கேந்திரா' என்ற நிறுவனத்தின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள்ளேயே பெற்று விடலாம். 

இதுகுறித்து, ரீஜினல் பாஸ்போர்ட் அதிகாரி கே. ஸ்ரீகர் ரெட்டி கூறுகையில், 'வழக்கமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, வண்ணப்பதாரரின் ஆவணங்கள் அனைத்தும், காவல்துறை அதிகாரிகளின் சரிபார்த்தலுக்காக அஞ்சல் முறையில் அனுப்பப் படும். அதனால், அதிக நாட்கள் ஆகும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய முறையின்படி, அனைத்தும் ஆன்லைன் முறை என்பதால் பாஸ்போர்ட்டினை கையில் பெற அதிகப்பட்சமாகவே 30 நாட்கள் தான் ஆகும்' என்று கூறினார்.  

மேலும் இதுகுறித்த எந்த கேள்வியையும், www.passportindia.gov.in என்ற இணயதளம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

மெக்சிகோவிற்கு படை எடுத்துள்ள பட்டாம் பூச்சிகள் !

கனடா மற்றும் வடஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான பட்டாம் பூச்சிகள் மெக்சிகோவிற்க்கு படையெடுத்து உள்ளன. அமெரிக்காவின் மத்திய மெக்சிகோவில் உள்ள வனப்பகுதியில் சுமார் 13 ஹெக்டர் நிலப்பரப்பு பட்டாம் பூச்சிகளால் சூழ்ந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டாம் பூச்சிகள் 2000 மைல் துரம் வரை இந்த வனப் பகுதிக்கு பறந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பருவ நிலை சூழல் காரணமாக பட்டாம் பூச்சிகள் வசிப்பதற்கு தேவையான இதமான சூழல் அங்கு நிலவுவதால் பட்டாம் பூச்சிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டை விட தற்போது பட்டாம் பூச்சிகளின் வருகை மிகவும் குறைவு எனவும்  ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

பட்டாம் பூச்சிகளின் இனம் அழிவதற்கு காரணம் சுற்றுப்புறச்சூழல் மாசுப்பாடு தான் எனவும் எனவே சுற்றுப்புற சூழலின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் விஞ்சானிகள் தெரிவித்து உள்ளனர்.

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்!!

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.  அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.   திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

இலங்கையில் அதிகம் கொல்லப்படும் திமிங்கிலங்கள்!

ஸ்ரீ லங்கா: இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் உள்ள திமிங்கிலங்களை கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, தேசிய கடலாய்வு திணைக்கத்தின் தலைவர் ஹிரான் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கப்பல்களாலேயே அதிக திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எச்ஐவிக்கு முதல் எதிரி மனிதனின் உடம்பு தான்!

லண்டன் : மனிதர்கள் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும் தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம். மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி. (ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி, ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது. உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது. 

ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் அதிக உயிர் பலி வாங்கும் தொற்று நோயாக எய்ட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரம் நடக்கிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி (இன்று) உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடக்கின்றன. எச்.ஐ.வி. பாதிப்பு பற்றி இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. உடலில் எச்ஐவி கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்தது. இதுபற்றி தலைமை ஆராய்ச்சியாளர் மிகேல் வெப் கூறியதாவது:

எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், எச்ஐவியின் குணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்வது அவசியம். லூக்கோசைட்ஸ் எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள்தான் எதிர்ப்பு சக்தி செல்கள். இவற்றில் எச்ஐவி கிருமிகள் பல்கிப் பெருகுவதால் நோய் தீவிரம் அடைகிறது. நம் உடலிலேயே இருக்கும் எஸ்ஏஎம்எச்டி1 எனப்படும் புரோட்டீன், எச்ஐவி கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். 

எச்ஐவிக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்சி நியூக்ளியோடைட் பொருளை எஸ்ஏஎம்எச்டி1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளோம். இதை மருந்தாக பயன்படுத்தினால், எச்ஐவி பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. இவ்வாறு மிகேல் கூறினார்.

ஈராக்கில் ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல்:


ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நேற்று (ஜன.5) ஷியா பிரிவினரை குறி வைத்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் கடந்த டிசம்பர் மாதம் வாபஸ் பெறப்பட்டு அங்கிருந்து வெளியேறியது. அதை தொடர்ந்து ஈராக்கில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற தொடங்கி விட்டன. தலைநகர் பாக்தாத் அருகே நேற்று ஷியா பிரிவினரை குறி வைத்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பாக்தாத் அருகேயுள்ள காதிமியா என்ற இடத்தில் ஷியா பிரிவினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.  அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 27 பேர் உயிர் இழந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் பாக்தாத் அருகேயுள்ள அர்பாசீன் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினான்.
அதில், 45 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கர்பாலா நகரில் உள்ள தங்கள் வழிபாட்டு தலத்துக்கு ஊர்வலமாக சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், சன்னி பிரிவை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கார் குண்டு தாக்குதல்கள் குறித்து ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் குவாசிம் அல் மவுசவி கூறும்போது, மக்களிடையே பீதியையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கிடையே, தாக்குதல்கள் நடந்த இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் பிறந்த சீனக் குழந்தை!

ஷாங்காய்: விமானத்தில் பயணம் செய்த சீன பெண்ணுக்கு, விமானத்திலேயே அழகிய குழந்தை பிறந்தது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து சென்ற விமானத்தில் பெங்யூ என்ற 24  வயது பெண் பயணம் செய்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏறபட்டது. சீன விமானங்களில் பணிப்பெண்களுக்கு  பிரசவம் பார்க்கும் பயிற்சியும் அளிக்கப்படுவது உண்டு.

எனவே, விமான பணிப்பெண்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை 3 கிலோவுடன் ஆரோக்கியமாக இருந்தது. விமானம் தரை இறங்கியதும் தாய்- குழந்தை  இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

24 மணி நேரம் இடைவிடாமல் ஒளிபரப்பு விளம்பர குறுக்கீடு இல்லாமல் 4 ஆக்ஷன் மூவி சேனல்கள்

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் 24 மணி நேர ஆக்ஷன் மூவி சேனல்களை சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. 
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனம், புதிதாக 4 ஆக்ஷன் மூவி சேனல்களை நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. ‘சன் ஆக்ஷன்’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெமினி ஆக்ஷன்’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘சூரியன் டி.வி’ என்ற பெயரில் கன்னடத்திலும், ‘சூர்யா ஆக்ஷன்’ என்ற பெயரில் மலையாளத்திலும் துவங்கப்பட்டுள்ள இந்த சேனல்கள் 24 மணி நேர சேனல்கள். விளம்பர இடையூறு இல்லாத இந்த மூவி சேனல்கள், கட்டண சேனல்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், முதல் முறையாக விளம்பரம் இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்படும் 24 மணி நேர ஆக்ஷன் மூவி சேனல்கள் என்ற பெருமையை இந்த புதிய சேனல்கள் பெறுகின்றன. இந்த புதிய சேனல் களையும் சேர்த்து, சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தில் உள்ள சேனல்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 10 தமிழ் சேனல்கள், 8 தெலுங்கு சேனல்கள், 7 கன்னட சேனல்கள், 4 மலையாள சேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தி வைத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள் 15 பேர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத் : தாங்கள் கடத்தி வைத்திருந்த பாகிஸ்தான் படை அதிகாரிகள் 15 பேரை கொன்று விட்டதாக தலிபான் தீவிரவாதிகள் நேற்று அறிவித்தனர். பாகிஸ்தானில் மறைந்திருந்த தீவிரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து கொன்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு நெருக்கடி அதிகரித்தது. தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமென அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்யத் தொடங்கியது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு உளவு நிறுவனம்(ஐ.எஸ்.ஐ) அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இதை தலிபான் தீவிரவாதிகளில் சிலர் மறுத்தனர். மேலும், அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த மாதம் 22ம் தேதியன்று ஆப்கனிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் படை அதிகாரிகள் 15 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்திருந்தனர். அவர்களை கொன்று விட்டதாக நேற்று தீவிரவாதிகள் அறிவித்தனர். 

தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் அசானுல்லா அசான் அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறுகையில், ‘நாங்கள் கடத்திய 15 அதிகாரிகளையும் சுட்டுக் கொன்று, உடல்களை வடக்கு வாஜிரிஸ்தானில் போட்டிருக்கிறோம்’ என்றார்.  இது பற்றி, விசாரித்து வருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட வீரர்களின் குண்டு துளைத்த உடல்கள்  நிர்வாண நிலையில் வடக்கு வஜிரிஸ்தான் ஸ்பின் தல் பகுதி வயல்வெளியில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டன.

எகிப்தில் முன்னாள் அதிபருக்கு தூக்கு?

கெய்ரோ : எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செய்த முபாரக்கிற்கு எதிராக கடந்த ஆண்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. புரட்சியின் போது போராட்டம் செய்தவர்கள் மீது ராணுவத்தை ஏவி விட்டதால் அப்பாவிகள் பலர் பலியாகினர். தொடர்ந்து போராட்டம் வலுப்பெறவே ஆட்சியை விட்டு விலகிய அவர் தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் உள்ளார். 

முபாரக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. போராட்டத்தின் போது முபாராக் நினைத்திருந்தால் மக்கள் இறப்பை தடுத்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பலரின் இறப்புக்கு காரணமான முபாரக்கிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தலைமை வழக்கறிஞர் சியுலிமன் தெரிவித்தார்.

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 70 பேர் பலி

பாக்தாத் : ஈராக்கில் இருந்து அமெரிக்க படை முற்றிலும் வெளியேறிய பிறகு நடந்த தாக்குதல்களில் மிக பயங்கர தாக்குதல் நேற்று நடந்தது. ஒரே நேரத்தில் பல இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 70 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  ஈராக் அதிபர் சதாம் உசேன், அணுஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார், ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தார் என்ற குற்றச்சாட்டுகளை கூறி கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் ஈராக்கில் ஊடுருவின. 

அதன்பின், சதாம் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் அவர் தூக்கிலிடப்பட்டார். எனினும், அமெரிக்க படைகள் அங்கேயே தங்கி, தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டது. இந்நிலையில், அமெரிக்கா தனது படையை கடந்த மாதத்துடன் முற்றிலும் வாபஸ் பெற்றது. அது முதல் ஈராக்கில் அரசுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தன. இரு பிரிவினரிடையே அதிகார போட்டி நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாகுபா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். இந்த நிலையில், நாசிரியா நகரில் மத யாத்ரீகர்கள் மீது குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 44 பேர் உடல் சிதறி பலியாகினர்.

 அடுத்த சில மணி நேரத்தில் தலைநகர் பாக்தாத் உட்பட சில இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் சிக்கி 26 பேர் இறந்தனர். மாநில அரசு இணைய தளத்தில், ‘கர்பாலா புனித நகரை நோக்கி யாத்ரீகர்கள் நடந்து சென்றபோது சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க படை வெளியேறிய பிறகு உள்நாட்டு குழப்பம், அரசியல் நிலையற்றதன்மை, தொடர் தீவிரவாத தாக்குதல் என ஈராக் முழுவதும் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானை தாக்குவது சீனத்தை தாக்குவதற்கு ஒப்பானது: யு.எஸ்.இடம் சீனா கண்டிப்பு

அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்ல பாகிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோல மற்றுமொருமுறை அமெரிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று அந்நாட்டிடம் சீனா கண்டிப்புடன் கூறியுள்ளதென சீனா நாட்டின் செய்தி கூறுகிறது.

கடந்த வாரம் வாஷிங்டனில் யு.எஸ்.-சீனா இராணுவ, பொருளாதார பேச்சுவார்த்தையின் போது சீனா இவ்வாறு தெரிவித்தாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் தெரிவிக்கிறது.

பாகிஸ்தானின் இறையாண்மையை யு.எஸ்.மதிக்க வேண்டும் என்றும், அதை மீறி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதுவோம் என்று நேரடியாக, ஐயத்திற்கிடமின்றி யு.எஸ். அதிகாரிகளிடம் சீனா அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்த சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராசா கிலானியிடம், சீன பிரதமர் வென் ஜியாபாவோ இத்தகவலை கூறியதாகவும் அச்செய்தி கூறுகிறது.

பாகிஸ்தான், சீன பிரதமர்கள் 45 நிமிடம் பேசியதாக அச்செய்தி கூறுகிறது.

பின் லேடன் இருப்பிடத்தை ஐ.எஸ்.ஐ. அதிகாரி காட்டிக் கொடுத்தார்?

பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.-யைச் சேர்ந்த ஒருவர் பின்லேடன் இருப்பிடத்தை பணத்திற்கு ஆசைப்பட்டுக் காட்டிக் கொடுத்தார் என்று ஹில்ஹவுஸ் என்ற பெண்மணி தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அல் கய்டா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின் லேடன் அமெரிக்கக் கப்பற்படையினரான நேவி சீல் படையினரால் கொல்லப்பட்டு அவரது உடலை கடலில் அமிழ்த்தினர் என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் இந்தப் படுகொலை பாகிஸ்தான் உளவுப்பிரிவ்னருக்குத் தெரியாமல் நடந்தது என்றே தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஹில்ஹவுஸ் என்ற அந்தப் பெண்மணி 'த ஸ்பை ஹூ பில்டு மீ' என்ற வலைப்பதிவுத் தளத்தில் பாகிஸ்தான் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் டாலர்கள் தொகைக்கு ஆசைப்பட்டு பின் லேடன் இருப்பிடத்தைக் காட்டி கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்க்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டதாக அந்த வலைப்பதிவு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

'பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படாது'

பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படாது என்று அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கயானி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் தற்போதைய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, இராணுவம் ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகவும், இதற்கு பதிலடியாக அவ்வாறு இராணுவம் ஆட்சியை கைப்பற்றினால் அமெரிக்க இராணுவத்தை அனுப்பி அதனை முறியடிக்க வேண்டும் என்று அதிபர் சர்தாரி, அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் செய்தி வெளியானது. 

இது குறித்த தகவல் வெளியானதிலிருந்தே பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. 

இந்நிலையில்,பாகிஸ்தானில் இராணுவ புரட்சியோ அல்லது முன்கூட்டியோ தேர்தல் வராது என கயானி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கிலானி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க இராணுவ தலைமை தளபதி பர்வேஷ் கயானியும், இதர உயர் இராணுவ அதிகாரிகளும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

தற்போது பதவி வகிக்கும் அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2013) வரை உள்ளது. எனவே இந்த ஆட்சி தனது பதவி காலத்தை முழுமையாக முடிக்க இராணுவ அதிகாரிகள் விரும்புவதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கிறது.

பத்மநாபர் கோவில் பாதுகாப்பு: கேரளா அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் உள்ள பத்மநாபர் கோவிலுக்கு பாதுகாப்பு அளிக்கும் விடயத்தில்,நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,கேரள அரசின் வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய முயன்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,"உங்களது விரிவான அறிக்கைகளும், பிரமாணப் பத்திரங்களும் எங்களுக்குத் தேவையில்லை.கோவில் பாதுகாப்பை பலப்படுத்த உங்களுக்கு 3 மாத அவகாசம் கொடுத்தோம். ஆனால் நீங்கள் எதுவும் செய்யவில்லை.இது ஏற்றுக்கொள்ள முடியாதது' என்றனர்.

பத்மநாபர் கோவிலின் ரகசிய அறைகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. 

இந்த நிலையில், பொக்கிஷங்களுக்கு தகர்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை என்பதால் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நடவடிக்கை இந்திய வரைபடத்தின் தவறை திருத்தி சீரானது


வாஷிங்டன் : அமெரிக்க அரசின் இணையதளத்தில் இந்தியா குறித்த வரைபடம் தவறாக குறிப்பிடப்பட்டதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவற்றை சரி செய்து புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தியாவின் வரைபடமும் இடம் பெற்றுள்ளது. இதில், இந்தியாவின் எல்லைகள் தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தன. குறிப்பாக, காஷ்மீர், பாகிஸ்தான் பகுதியில் இருப்பது போன்று, வரைபடத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரைபடத்தில் இடம் பெற்றிருந்த தவறுகள் சரி செய்யப்பட்டு, புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலான்ட் கூறுகையில்,"சரி செய்யப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். காஷ்மீர் குறித்த விவாரத்தில் எங்களுக்கு எதுவும் தொடர்பு இல்லை. வரைபடம் குறித்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என்றார்.

பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு: 25 பேர் பலி!


பிலிப்பைன்ஸிலுள்ள பான்டுகான் நகரின் அருகேயுள்ள மலைப்பகுதியில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் சிக்கிப் பலியானார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதி தீவில் உள்ள பான்டுகான் நகரம். இதன் அருகேயுள்ள மலைப்பகுதியில் திடீரென மலைச்சரிவு ஏற்பட்டது. தங்கம் முதலான பல உலோகங்களின் சுரங்கங்கள் மிகைந்துள்ள இப்பகுதியில் ஏற்பட்ட இந்த மலைச்சரிவில் பல வீடுகள் புதைந்தன.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு இராணுவம் விரைந்தது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இதுவரை 25 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் 100 க்கு மேற்பட்டோரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் எனத்தெரிகிறது.
பிலிப்பைன்ஸில் கடந்த மாதம் இறுதியில் வீசிய புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1,200 க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.