Total Pageviews

Sunday, 18 September 2011

இந்தியாவிடம் உத்தரவாதம் கேட்கிறது அமெரிக்கா


நீதியான விசாரணை யொன்றை இலங்கை அரசு தானே நடத்துமென்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா என்று இந்தியாவிடம் இராஜதந்திர ரீதியில் கேட்டிருக்கிறது அமெரிக்கா.
இதற்கான உத்தரவாதத்தை இந்தியா வழங்கினால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை உடனடியாக அமைப்பது பற்றிய விடயத்தை மீள்பரிசீலனை செய்ய முடியுமென்று அமெரிக்கா இந்தியாவிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.
ஐ. நா. மனித உரிமைகள் சபைக் கூட்டம் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சர்வதேச பொறி முறை ஒன்று அவசியமென்று மேற்குலக நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் வலியுறுத்தலாம் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்கா இந்தியாவிடம் குறித்த உத்தரவாதத்தைக் கோரியுள்ளது.
அமெரிக்காவின் இந்தக் கோரிக்கை குறித்து இந்தியா இதுவரை எதுவித பதிலையும் வழங்கவில்லை.
அதே சமயம், கொழும்பு வந்து புதுடில்லி செல்லும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் அங்கு இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தவுள்ளாரெனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்தப் பதிலே சர்வதேச அரங்கில் இலங்கைத் தொடர்பான தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமென மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.

போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ள பிரித்தானியா


இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது அக்கறையை காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது.
குறித்த காலக்கெடுவை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக், பிரித்தானிய வெளியுறவு குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த காலக்கெடுவுக்குள் இலங்கை குறித்த விடயங்களில் அக்கறை செலுத்தாவிட்டால், இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களுக்கு பிரித்தானியாவும் தீவிரமாக ஆதரவளிக்கும் என்று வில்லியம் ஹேக் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்ற விடயத்தில். பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு, உரிய கரிசனையை காட்டவில்லை. சர்வதேசத்துடன் இணைந்து இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை. அதில் தோல்வி கண்டுள்ளது என்று பிரித்தானிய வெளியுறவு குழு தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வில்லியம் ஹேக் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய வெளியுறவுக்குழுவின் கருத்துக்களுக்கு தாம் உடன்படுவதாக வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 காணொளியும் இதனை தெளிவாக காட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.