Total Pageviews

Blog Archive

Friday, 30 March 2012

சோனியாவின் நெஞ்சைத்தொட்ட பாலச்சந்திரனின் ஒளிப்படம்


ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தியே, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும் அவர் அவ்வாறு கூறியதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே காரணம் என இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக சனல்-4 வெளியிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் அவலங்கள் பற்றிய காட்சிகள் சோனியாகாந்திக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுவதாக தம்மை அடையாளம் காட்ட விரும்பாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழ் ஊடகங்களில் வெளியான இந்தப் படங்கள் ஒரு புயலையே தோற்றுவித்தன.வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, மார்ச் 22ஆம் திகதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தனியொரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க முடியாது என்று கூறியிருந்தனர்

bala-son-of20prrabaharan


.இதனால் அதிருப்தியடைந்த சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோனியாகாந்தியை அணுகி அவரிடம் முறையிட்டனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட படங்களை அவர்கள் சோனியாகாந்தியிடம் காண்பித்து நியாயம் கேட்டனர்.
குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் மார்பில் சுடப்பட்டுக் கிடக்கும் காட்சி அவரை உறைய வைத்தது. இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தான் நடவடிக்கை எடுப்பதாக சோனியாகாந்தி உறுதி வழங்கினார்.
உடனடியாகவே, அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.ஒரு குழந்தையின் மரணம் இந்திய – இலங்கை உறவையே மாற்றி விட்டது என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது.

வெட்கத்தில் தலைகுனிந்த சீனா


ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது. உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து விட்டதால், இதைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில்தான் சீனா இவ்வாறு தீவிர முயற்சியில் இறங்கியது.
இந்தியாவின் எதிர் நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால், எதிர்காலத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும் என்பதே சீனாவின் குயுக்தியான திட்டம் என்கிறார்கள். இதனால்தான் திடீரென வலிய வந்து இலங்கைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.
சீனாவின் கடும் முயற்சிகள் காரணமாகவே இதுவரை வெறும் ஒற்றை இலக்கத்திலிருந்த இலங்கை ஆதரவு 15 ஆக உயர்ந்தது.ஆனால் இதற்காக அமெரிக்கா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. 24 நாடுகளுக்கும் அதிகமாகவே ஆதரவு தருவார்கள் என நம்பியது சீனா. ஆனால் 8 நாடுகள் நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் 24 உடன் நின்றுவிட்டது.
இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியுடன் உள்ளது. இதைப் புரிந்து கொண்டுள்ள சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளைச் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட, இனி இலங்கையில் வலுவாக காலூன்ற சீனாவுக்கு தடையில்லை. இதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போட்டுள்ளது.
இதைத்தான் அன்றே ஈழத் தலைவர்களும், தமிழகத் தலைவர்கள் பலரும் கூட மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சீனாவை வைத்துக் கொண்டு இலங்கை, இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டும் என்று கணித்துக் கூறினார்கள். ஆனால் அதை இந்திய அரசுதான் நம்பவில்லை, ஏற்கவில்லை.
இப்போது ஐநாவில் தோற்ற ‘கடுப்பில்’ உள்ள இலங்கை, தன் நண்பன் சீனா மூலமாக என்னென்ன தொல்லைகளை இந்தியாவுக்கு தரவிருக்கிறார்களோ தெரியவில்லை என்கின்றனர் அரசியல் அவதானிகள்.

முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி




மேரிலாண்ட் மருத்துவ மையத்தில் முகம் சிதைந்த ஒருவருக்கு, உடல் உறுப்பு தானம் செய்த ஒருவரது முகப் பகுதிகளை எடுத்து பொருத்தி மருத்துவர்கள் செய்துள்ள முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவரின் சாயல் புதிய முகத்தில் இல்லை என்பதுதான் வெற்றிக்கு அடிப்படையே.


மேலும், உலகிலேயே இந்த அறுவை சிகிச்சைதான் அதிக நேரம், அதிக செலவில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளது.

விர்ஜீனியாவைச் சேர்ந்த ஹில்ஸ் ரிச்சாட் லீ நோரிசுக்கு (வயது 37) 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் முகப்பகுதிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் பற்கள், மூக்கு, நாக்கின் ஒரு பகுதி, உதடுகள் ஆகியவற்றை அவர் இழந்துவிட்டார். மூக்கு முற்றிலும் சேதமடைந்து நுகரும் உணர்வே இல்லாமலும், பாதி நாக்குடன், முகத்தில் பல்வேறு தையல்களும், கண் பார்வை குறைந்தும் இருந்ததால் ரிச்சர்ட், வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து வந்தார்.

இவருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த ஒருவரது முகப் பாகங்களை எடுத்து பொருத்தும் அறுவை சிகிச்சை செய்ய மேரிலாண்ட் மருத்துவ மையம் முடிவெடுத்தது.

அதன்படி, வேறொருவருடைய உடலில் இருந்து மேல் மற்றும் கீழ்தாடை, பற்கள், மூக்கு, நாக்கின் எஞ்சிய பகுதி மற்றும் முக திசுக்களை எடுத்து ரிச்சர்ட்டிற்கு பொருத்தும் அறுவை சிகிச்சை 36 மணி நேரம் நடைபெற்றது.

அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் ரிச்சர்ட், தற்போது பல் துலக்குகிறார், முகச் சவரம் செய்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன் இழந்த நுகரும் உணர்வையும் அவர் திரும்ப பெற்றுவிட்டார்.

தனக்கு புதிய முகம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் ரிச்சர்ட். தானும் மற்றவர்களைப் போல வெளியில் நிம்மதியாக நடமாட முடியும் என்றும், தன்னை யாரும் விநோதமாக பார்க்க மாட்டார்கள் என்றும் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

Friday, 23 March 2012

இலங்கைக்கு எதிராக ஓட்டு: இலங்கையில் எப்படியான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம், 24-15 என்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றது பற்றி இலங்கையில் எப்படியான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன? இதோ, இப்படித்தான்:
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், “15 நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பெரும் திருப்தி அளிக்கிறது” என்கிறார்.
“அந்த 15 நாடுகள் மீதும் பல்வேறு விதமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அவ்வளவு அழுத்தங்களின் மத்தியிலும், 15 நாடுகள் எமக்கு வாக்களித்துள்ளன. வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த 8 நாடுகளுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் உள்ளன. 15 நாடுகள் எமக்கு வாக்களித்ததன் மூலம், தீர்மானத்தை எதிர்த்துள்ளன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல், தீர்மானத்தைவிட்டு ஒதுங்கி நின்றுள்ளன. மொத்தத்தில், 23 நாடுகளுக்கு இந்த தீர்மானத்தில் உடன்பாடு கிடையாது.
24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. வித்தியாசம் 1 வாக்குதான். இந்தியா எமக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், தீர்மானம் தோற்றுப் போயிருக்கும்” என்றும் கூறியுள்ளார் அவர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷே, “வெளிநாட்டு நெருக்குதல்கள் ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. இதெல்லாம் சாதாரணம். வெளிநாட்டு நெருக்கடிகளை வெற்றிகரமாக முறியடிக்கக் கூடிய நிலைமை எமது நாட்டில் காணப்படுகின்றது. காலத்துக்கு காலம்  இவ்வாறான வெளிநாட்டு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்படியான நெருக்கடிகளை எல்லாம் முறியடிக்க எங்களால் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே, “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள உறவில் எவ்வித மாற்றமும் கிடையாது. இந்தியா எமக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுக்கும்போது, அவர்களுக்கு உள்நாட்டில் (இந்தியாவில்) சில அரசியல் அழுத்தங்கள் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷேவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷேவும், இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்கள்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் செயலாளர் குமாரஸ்ரீ ஹெட்டிகே, “இந்த நாட்டின் முன்னாள் தலைவர்கள் சிலர், இலங்கைக்கு எதிரான நாடுகளுடன் சேர்ந்து, எமக்கு துரோகம் செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இவர் யாரைப்பற்றி குறிப்பிடுகிறார்? எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பற்றியா?

இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா


ஜெனீவாவில் சற்று நேரத்துக்குமுன் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக 24 நாடுகளும், ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. எந்தப் பக்கம் வாக்களிக்கும் என அதிக சஸ்பென்ஸை ஏற்படுத்தியிருந்த இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.
இலங்கைக்கு இரு அயல்நாடுகள் உள்ளன. ஒன்று இந்தியா, மற்றையது மாலதீவு. இவற்றில், இந்தியா, எதிர்த்து வாக்களித்திருக்க, மற்றைய அயல் நாடான மாலதீவு, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.
மற்றொரு விஷயம், இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு ஆசிய நாடு இந்தியாதான். வாக்களிப்பில் கலந்துகொண்ட மற்றைய அனைத்து ஆசிய நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, மாலைதீவு, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக 47 நாடுகள் உள்ளன. தீர்மானம் வெற்றிபெற 24 வாக்குகள் தேவை. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்ததால், இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் இரு தரப்பையும் ஆதரிக்காமல், நடுநிலைமை வகித்தன.
சில நாடுகள் வாக்களிப்பதற்குமுன், தாம் எதற்காக ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்கின்றன என தமது கருத்தை தெரிவித்துவிட்டு வாக்களித்தன. இதோ, சில நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களித்த காரணங்களைப் பாருங்கள்:
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பங்களாதேஷ் நாட்டுப் பிரதிநிதி, “குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மட்டுமே இப்படியான தீர்மானங்களை கொண்டு வருவதை நாம் விரும்பவில்லை. அதனால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார்.
சீனாவின் பிரதிநிதி, “இலங்கையில் உள்நாட்டு விவகாரம் இது. அதில் தலையிடுவது, மற்றொரு நாட்டின் இறைமையில் தலையிடுவது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார். ரஷ்யப் பிரதிநிதி தெரிவித்த கருத்தும் இதோதான்!
மாலதீவு பிரதிநிதி, “குற்றச்சாட்டு சரியானதுதான். ஆனால், அதை ஆராய்ந்து திருத்திக் கொள்வதற்கு இலங்கைக்கு கொடுத்த கால அவகாசம் போதாது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார். கிர்கிஸ்தான் பிரதிநிதி கூறிய காரணமும் இதேதான்.
பிலிப்பீன்ஸ் நாட்டின் பிரதிநிதி, “நீண்டகால யுத்தம் முடிந்து இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஒரு நாட்டின் (இலங்கை) மீது அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கை இது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார்.
கியூபா நாட்டு பிரதிநிதி, மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து தமது நாட்டின் நிலைப்பாட்டை தெரிவித்தார். “இலங்கைக்கு எதிரான நடவடிக்கை, இரட்டை நிலைப்பாட்டை (double standards) உடையது. சில நாடுகள் எந்த போர்க் குற்றமும் செய்யலாம். அதற்கு விசாரணை கிடையாது. இலங்கை போன்ற சில நாடுகள் மீதுதான் விசாரணை வைக்கிறீர்கள்.
அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை கோருகின்றன. இவர்கள் ஏன் லிபியாவில் நேட்டோ படைகளும், ஈராக்கில் அமெரிக்கப் படைகளும் செய்த போர்க் குற்றங்களையும் விசாரிக்க கோரவில்லை? நாங்கள் (கியூபா) இலங்கையின் நண்பர். இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கிறோம்” என்று தெரிவித்தார் கியூபா பிரதிநிதி.

இலங்கைக்கு எதிராக (பிரேணைக்கு ஆதரவாக) வாக்களித்த நாடுகள்:

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரியா, இத்தாலி, நார்வே, ஸ்பெயின், பெல்ஜியம், சுவிட்ஸர்லாந்து, கிரீஸ், ஹங்கேரி, போலந்து, மால்டோவா, ருமெனியா, சிலி, காஸ்டா ரிக்கா, கௌதமாலா, மெக்சிகோ, பெரு, உருகுவே, பெனின், கெமரூன், லிபியா, மொரிசியஸ், நைஜீரியா.

இலங்கைக்கு ஆதரவாக (பிரேணைக்கு எதிராக) வாக்களித்த நாடுகள்:

பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கத்தார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்குவடோர், ரஷ்யா, காங்கோ, மொரிட்டானியா, உகன்டா.

வாக்களிப்பில் நடுநிலை வகித்த நாடுகள்:

ஜோர்தான், அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், கிர்கிஸ்தான்.