யேமனின் தலைநகர் சனா'ஆவில் அந்த நாட்டின் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹ் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் என எதிரெதிர் போராட்டங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
அரசாங்க தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் சாலிஹ், இரத்தக்களரியை தடுக்கும் நோக்கில் தான் பதவி விலகத்தயாராக இருப்பதாகவும், ஆனால், மிகவும் பாதுகாப்பானவர்கள் என்று நம்பக்கூடிய தரப்பிடமே தான் ஆட்சியை ஒப்படைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
தனது அதிகார மாற்றம் அமைதியானதாகவும், மக்களை நோக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றும், ஆனால் ஊழல் பேர் வழிகளிடம் ஆட்சி சென்று சிக்க அது காரணமாகிவிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இளைஞர்கள் தாமே தமக்கான சொந்த அரசியல் கட்சியை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களோ அவரது கூற்று அர்த்தமற்றது என்று கூறியிருக்கிறார்கள். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.
தீவிர பாதுகாப்பு
இன்று இரு தரப்பு ஆர்ப்பபாட்டங்களும் மிகவும் பெரியவையாக இருந்ததால், தலைநகரில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
இரு தரப்பினரிடமும் ஆயுதங்கள் இருந்தன. இரு தரப்பும் பின்வாங்குவதற்கான சமிக்ஞை எதனையும் காண்பிக்கவும் இல்லை.
இந்த நிலைமை அங்கும் உள்நாட்டுப் போருக்கு வித்திட்டு விடுமொ அன்ற அச்சம் பலரிடமும் காணப்படுகின்றது.
சிரியா நிலவரம்
அதேவேளை, மத்திய கிழக்கின் ஏனைய இடங்களிலும் அமைதியீனங்கள் தொடருகின்றன.
சிரியாவில் வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து தேசிய மட்டத்திலான ஒரு வேலை நிறுத்தத்துக்கு எதிர்த்தரப்புச் செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
சிரியாவின் அதிபர் அஸத்துக்கு அவரது 11 வருட ஆட்சியில் அவர் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய சவாலாக இது உருவெடுத்துள்ளது.
1963 ஆம் ஆண்டு முதல் அங்கு அமலில் இருந்துவரும் அவசர நிலையை நீக்குவதாக வியாழனன்று அவர் அறிவித்திருந்தார்.
போராட்டங்களுடன் சம்பந்தப்பட்ட பலர் தலைநகர் டமாஸ்கஸில் கைது செய்யப்பட்டும் உள்ளார்கள்.
